சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.012
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மத்தா வரை நிறுவி, கடல் பண் - நட்டபாடை (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Hdfawt2XBvU |
1.053
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை பண் - பழந்தக்கராகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=19dU8fmN7AA |
1.093
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நின்று மலர் தூவி, இன்று பண் - குறிஞ்சி (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=ixiwntdKLwU |
1.131
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், பண் - மேகராகக்குறிஞ்சி (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=g8kcAS4LkJk |
2.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பண் - காந்தாரம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=2CHPRCGsc_4 Audio: https://sivaya.org/audio/2.064 Devaa siriyom.mp3 |
3.034
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வண்ண மா மலர் கொடு பண் - கொல்லி (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=lFGCZUoAzS4 |
3.099
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முரசு அதிர்ந்து எழுதரு முது பண் - சாதாரி (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=KOzdh6lDz2c |
6.068
திருநாவுக்கரசர்
தேவாரம்
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை, பண் - திருத்தாண்டகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=uJX2Zs71xfY |
7.025
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை பண் - நட்டராகம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=J0kKlrUj_Pk |
7.043
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நஞ்சி, இடை இன்று நாளை பண் - கொல்லிக்கௌவாணம் (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=Ju6apsximE4 |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.012  
மத்தா வரை நிறுவி, கடல்
பண் - நட்டபாடை (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம் கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே. | [1] |
தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி சைவன், இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம் மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண், முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே. | [2] |
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாசவேதனை, ஒண் தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம் களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே. | [3] |
சுரர், மா தவர், தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா நரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர் அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும் முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே. | [4] |
அறை ஆர் கழல் அந்தன்தனை, அயில் மூஇலை, அழகு ஆர் கறை ஆர் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில், மறை ஆயினபல சொல்லி, ஒண்மலர் சாந்து அவை கொண்டு, முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே. | [5] |
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி, எழில் விசயற்கு ஓவாத இன் அருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில் சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார், மூவாத பல் முனிவர், தொழும் முதுகுன்று அடைவோமே. | [6] |
தழல் சேர்தரு திருமேனியர், சசி சேர் சடை முடியர், மழ மால்விடை மிக ஏறிய மறையோன், உறை கோயில் விழவோடு ஒலி மிகு மங்கையர், தகும் நாடகசாலை, முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே. | [7] |
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன் கதுவாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில் மது வாய செங் காந்தள் மலர் நிறைய, குறைவு இல்லா முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே. | [8] |
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய, செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்- புயல் ஆடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே முயல் ஓட, வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே. | [9] |
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான் மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர் கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி, முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே. | [10] |
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர் புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும் பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.053  
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
பண் - பழந்தக்கராகம் (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர் நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே. | [1] |
பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல் கதிரோன், மதி, பார், எற்று நீர், தீ, காலும், மேலைவிண், இயமானனோடு, மற்று மாது ஓர் பல் உயிர் ஆய், மால் அயனும் மறைகள் முற்றும் ஆகி, வேறும் ஆனான் மேயது முதுகுன்றே. | [2] |
வாரி, மாகம் வைகு திங்கள், வாள் அரவம், சூடி, நாரி பாகம் நயந்து, பூமேல் நான்முகன்தன் தலையில் சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர் மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே. | [3] |
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர் நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும், நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும் ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே. | [4] |
வழங்கு திங்கள், வன்னி, மத்தம், மாசுணம், மீது அணவி, செழுங் கல்வேந்தன் செல்வி காண, தேவர் திசை வணங்க, தழங்கு மொந்தை, தக்கை, மிக்க பேய்க்கணம் பூதம் சூழ, முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே. | [5] |
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி, சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே. | [6] |
மயங்கு மாயம் வல்லர் ஆகி, வானினொடு நீரும் இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த புயங்க ராக மாநடத்தன், புணர் முலை மாது உமையாள் முயங்கு மார்பன், முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே. | [7] |
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்) அறியாக் கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும், கொய் மலரால் ஏல இண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும் மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே. | [8] |
உறி கொள்கையர், சீவரத்தர், உண்டு உழல் மிண்டர் சொல்லை நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழுமின்! மறி கொள் கையன், வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட முறி கொள் மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே. | [9] |
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை, பித்தர்வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்...... | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.093  
நின்று மலர் தூவி, இன்று
பண் - குறிஞ்சி (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே. | [1] |
அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர், நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே. | [2] |
ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று, கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே. | [3] |
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர் வாசமலர் தூவ, பாசவினை போமே. | [4] |
மணி ஆர் முதுகுன்றைப் பணிவார் அவர் கண்டீர், பிணி ஆயின கெட்டுத் தணிவார், உலகிலே. | [5] |
மொய் ஆர் முதுகுன்றில் ஐயா! என வல்லார் பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே. | [6] |
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார் படைஆயின சூழ, உடையார், உலகமே. | [7] |
பத்துத்தலையோனைக் கத்த, விரல் ஊன்றும் அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே! | [8] |
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே. | [9] |
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான், நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே! | [10] |
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன் ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.131  
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
பண் - மேகராகக்குறிஞ்சி (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே- தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம் ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர் முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே. | [1] |
வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில் விசயன் மேவு போரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் காரின் மலி கடிபொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து, கயம் முயங்கி, மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே. | [2] |
தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன், அங்கி, மிக்க விதாதாவினொடும், விதிவழியே தண்டித்த விமலர் கோயில் கொக்கு, இனிய கொழும் வருக்கை, கதலி, கமுகு, உயர் தெங்கின், குலை கொள்சோலை, முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே. | [3] |
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து, விண் உளோர்கள், செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே தேர் அது ஆக, மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக, மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே. | [4] |
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய், ஒருபால் எள்காது உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின் முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே. | [5] |
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு வகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டுகரை அருகும் மறிய மோதி, தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து, முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே. | [6] |
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி, அமரர் வேண்ட, நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் திறம் கொள் மணித்தரளங்கள் வர, திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய்முதுகுன்றமே. | [7] |
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும் பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலைமலையை நிலை பெயர்த்த ஞான்று, மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கே முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே. | [8] |
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும், ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணாத் தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே. | [9] |
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு உடையாரும், விரவல் ஆகா ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு உய்மின்,தொண்டீர்! ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று, மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே. | [10] |
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப் பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு, தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.064  
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
பண் - காந்தாரம் (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே! ஆவா! என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்! ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி, மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே. | [1] |
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயில் ஆகத் திகழ்வானை, மந்தி ஏறி, இனம் ஆம் மலர்கள் பல கொண்டு, முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே. | [2] |
நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம், தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானை, பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த, மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே. | [3] |
தெரிந்த அடியார், சிவனே! என்று திசைதோறும், குருந்தமலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி, இருந்தும் நின்றும், இரவும் பகலும், ஏத்தும் சீர், முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே. | [4] |
வைத்த நிதியே! மணியே! என்று வருந்தித் தம் சித்தம் நைந்து, சிவனே! என்பார் சிந்தையார்; கொத்து ஆர் சந்தும், குரவும், வாரிக் கொணர்ந்து உந்தும் முத்தாறு உடைய முதல்வர்; கோயில் முதுகுன்றே. | [5] |
வம்பு ஆர் கொன்றை, வன்னி, மத்தமலர், தூவி, நம்பா! என்ன, நல்கும் பெருமான் உறை கோயில் கொம்பு ஆர் குரவு, கொகுடி, முல்லை, குவிந்து எங்கும் மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. | [6] |
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த, மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே. | [8] |
அல்லி மலர்மேல் அயனும், அரவின் அணையானும், சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர் கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட, முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே. | [9] |
கருகும் உடலார், கஞ்சி உண்டு கடுவே நின்று உருகு சிந்தை இல்லார்க்கு, அயலான் உறை கோயில் திருகல் வேய்கள் சிறிதே வளைய, சிறு மந்தி முருகின் பணைமேல் இருந்து நடம் செய் முதுகுன்றே. | [10] |
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழிச் சம்பந்தன், முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக் குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள், பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.034  
வண்ண மா மலர் கொடு
பண் - கொல்லி (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட, அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம் விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர் திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே. | [1] |
வெறி உலாம் கொன்றை அம் தாரினான், மேதகு பொறி உலாம் அரவு அசைத்து ஆடி, ஓர் புண்ணியன், மறி உலாம் கையினான், மங்கையோடு அமர்வு இடம் செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே. | [2] |
ஏறனார், விடைமிசை; இமையவர் தொழ உமை- கூறனார்; கொல் புலித் தோலினார்; மேனிமேல் நீறனார்; நிறைபுனல் சடையனார்; நிகழ்வு இடம் தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே. | [3] |
உரையின் ஆர் உறு பொருள் ஆயினான், உமையொடும்; விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார்; மேவு இடம் உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்த் திரையின் ஆர் எறி புனல்-திரு முதுகுன்றமே. | [4] |
கடிய ஆயின குரல் களிற்றினைப் பிளிற, ஓர் இடிய வெங்குரலினோடு ஆளி சென்றிடு நெறி, வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்வு இடம் செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே. | [5] |
கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார், பெரியது ஓர் வானம் ஆர் மதியினோடு அரவர், தாம் மருவு இடம், ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து, உமையொடும் தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே. | [6] |
மஞ்சர் தாம், மலர்கொடு வானவர் வணங்கிட, வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே, அம் சொலாள் உமையொடும்(ம்) அமர்வு இடம் அணி கலைச் செஞ் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே. | [7] |
காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை ஏரின் ஆர் முடி இராவணன், எடுத்தான், இற, வாரின் ஆர்முலையொடும் மன்னனார் மருவு இடம் சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே. | [8] |
ஆடினார், கானகத்து; அருமறையின் பொரு பாடினார்; பலபுகழ்ப் பரமனார்; இணை அடி ஏடின் ஆர் மலர்மிசை அயனும், மால், இருவரும் தேடினார் அறிவு ஒணார்; திரு முதுகுன்றமே. | [9] |
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர் பேசு மெய் உள அல; பேணுவீர்! காணுமின்- வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம்(ம்) இசை செய, தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே! | [10] |
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை நண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல் எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப் பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.099  
முரசு அதிர்ந்து எழுதரு முது
பண் - சாதாரி (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
முரசு அதிர்ந்து எழுதரு முது குன்றம் மேவிய பரசு அமர் படை உடையீரே; பரசு அமர் படை உடையீர்! உமைப் பரவுவார் அரசர்கள் உலகில் ஆவாரே. | [1] |
மொய் குழலாளொடு முதுகுன்றம் மேவிய பை அரவம் அசைத்தீரே; பை அரவம் அசைத்தீர்! உமைப் பாடுவார் நைவு இலர்; நாள்தொறும் நலமே. | [2] |
முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய மழ விடை அது உடையீரே; மழ விடை அது உடையீர்! உமை வாழ்த்துவார் பழியொடு பகை இலர்தாமே. | [3] |
முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய உரு அமர் சடைமுடியீரே; உரு அமர் சடைமுடியீர்! உமை ஓதுவார் திருவொடு தேசினர் தாமே. | [4] |
முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய பத்து முடி அடர்த்தீரே; பத்து முடி அடர்த்தீர்! உமைப் பாடுவார் சித்தம் நல்ல(வ்) அடியாரே. | [8] |
முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி, அன்று இயன்றவர் அறிவு அரியீரே; இயன்றவர் அறிவு அரியீர்! உமை ஏத்துவார் பயன் தலை நிற்பவர் தாமே. | [9] |
மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய கட்டு அமண் தேரைக் காய்ந்தீரே; கட்டு அமண் தேரைக் காய்ந்தீர்! உமைக் கருதுவார் சிட்டர்கள் சீர் பெறுவாரே. | [10] |
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை நாடிய ஞானசம்பந்தன் நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ் பாடிய அவர் பழி இலரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.068  
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை, கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னை, குருமணியை, கோள் அரவம் ஆட்டுவானை, கொல் வேங்கை அதளானை, கோவண(ன்)னை, அருமணியை, அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க திருமணியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [1] |
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள் தன்னை, காபாலி, கட்டங்கம் ஏந்தினானை, பார் ஒளியை, விண் ஒளியை, பாதாள(ன்)னை, பால் மதியம் சூடி ஓர் பண்பன் தன்னை, பேரொளியை, பெண் பாகம் வைத்தான் தன்னை, பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும் சீர் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [2] |
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை, ஏறு ஊர்ந்த பெம்மானை, எம்மான்! என்று பத்தனாய்ப் பணிந்த(அ)டியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை, முத்தினை, என் மணியை, மாணிக்கத்தை, முளைத்து எழுந்த செம்பவளக் கொழுந்து ஒப்பானை, சித்தனை, என் திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [3] |
ஊன் கருவின் உள்-நின்ற சோதியானை, உத்தமனை, பத்தர் மனம் குடி கொண்டானை, கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை, கார் மேகமிடற்றானை, கனலை, காற்றை, தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த தீம் கரும்பை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [4] |
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி, தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி, மிக்கது ஒரு தீவளி நீர் ஆகாசம்(ம்) ஆய், மேல் உலகுக்கு அப்பால் ஆய், இப்பாலானை; அக்கினொடு முத்தினையும் அணிந்து, தொண்டர்க்கு அங்கு அங்கே அறுசமயம் ஆகி நின்ற திக்கினை; என் திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [5] |
புகழ் ஒளியை, புரம் எரித்த புனிதன் தன்னை, பொன் பொதிந்த மேனியனை, புராணன் தன்னை, விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான் தன்னை, வெண்காடு மேவிய விகிர்தன் தன்னை, கழல் ஒலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப, கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் திகழ் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [6] |
போர்த்து, ஆனையின் உரி-தோல் பொங்கப்பொங்க, புலி அதளே உடையாகத் திரிவான் தன்னை; காத்தானை, ஐம்புலனும்; புரங்கள் மூன்றும், காலனையும், குரைகழலால் காய்ந்தான் தன்னை; மாத்து ஆடிப் பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினைவேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகித் தீர்த்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [7] |
துறவாதே யாக்கை துறந்தான் தன்னை, சோதி முழு முதல் ஆய் நின்றான் தன்னை, பிறவாதே எவ் உயிர்க்கும் தானே ஆகிப் பெண்ணினோடு ஆண் உரு ஆய் நின்றான் தன்னை, மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்து அகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலானை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [8] |
பொன் தூணை, புலால் நாறு கபாலம் ஏந்திப் புவலோகம் எல்லாம் உழி தந்தானை, முற்றாத வெண் திங்கள் கண்ணியானை, முழு முதல் ஆய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லாக் கல்-தூணை, காளத்தி மலையான் தன்னை, கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால் செற்றானை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [9] |
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி, எழுநரம்பின் இசை பாட இனிது கேட்டு, புகழ்ந்தானை; பூந்துருத்தி மேயான் தன்னை; புண்ணியனை; விண்ணவர்கள் நிதியம் தன்னை; மகிழ்ந்தானை, மலைமகள் ஓர்பாகம் வைத்து; வளர் மதியம் சடை வைத்து, மால் ஓர்பாகம் திகழ்ந்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.025  
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
பண் - நட்டராகம் (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
தில்லைருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப்புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார். இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி, முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க் கரையில் பரவையாரை நிற்கச் செய்து, தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர்தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத்துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம் பொன்னைத் தந்தரளுக எனப் பொன்செய்த மேனியினீர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது, ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது.
கைக்கு கிடைத்த பொருள் கை ந்ழுவிப் போனால் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்; முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்; மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே, என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?. | [1] |
உம்பரும் வானவரும்(ம்) உடனே நிற்கவே, எனக்குச் செம்பொனைத் தந்து அருளி, திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்; எம்பெருமான்! அருளீர், அடியேன் இட்டளம் கெடவே! . | [2] |
பத்தா! பத்தர்களுக்கு அருள் செய்யும் பரம்பரனே! முத்தா! முக்கணனே! முதுகுன்றம் அமர்ந்தவனே! மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே, அத்தா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [3] |
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்; திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்; கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே, அங்கணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [4] |
மை ஆரும் மிடற்றாய்! மருவார் புரம் மூன்று எரித்த செய்யார் மேனியனே! திகழும் முதுகுன்று அமர்ந்தாய்! பை ஆரும்(ம்) அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்; ஐயா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [5] |
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும், முடியால் வந்து இறைஞ்ச(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே! படி ஆரும்(ம்) இயலாள் பரவை இவள் தன் முகப்பே, அடிகேள்! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [6] |
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல் வந்து அணவும் மதி சேர், சடை மா முதுகுன்று உடையாய்! பந்து அணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே, அந்தணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [7] |
பரசு ஆரும் கரவா! பதினெண் கணமும் சூழ முரசார் வந்து அதிர(ம்), முதுகுன்றம் அமர்ந்தவனே! விரை சேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, அரசே! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! . | [8] |
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே! மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே! பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே, கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! . | [9] |
பிறை ஆரும் சடை எம்பெருமான்! அருளாய் என்று, முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே . | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.043  
நஞ்சி, இடை இன்று நாளை
பண் - கொல்லிக்கௌவாணம் (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
நஞ்சி, இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார் துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்! பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்! முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே! | [1] |
ஏரிக் கனகக்கமலம் மலர் அன்ன சேவடி ஊர் இத்தனையும் திரிந்தக்கால் அவை நோம்கொலோ? வாரிக்கண் சென்று வளைக்கப்பட்டு, வருந்திப் போய், மூரிக் களிறு முழக்கு அறா முதுகுன்றரே! | [2] |
தொண்டர்கள் பாட, விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்! பண்டு அகம் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே? கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே! | [3] |
இளைப்பு அறியீர்; இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என்? விளைப்பு அறியாத வெங் காலனை உயிர் வீட்டினீர்; அளைப் பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் முளைப்பிறைச் சென்னிச் சடைமுடி முதுகுன்றரே! | [4] |
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம் தொறும் பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ? மாடம், மதில், அணி கோபுரம், மணி மண்டபம், மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே! | [5] |
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டு இடைக் குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே? மழை வளரும் நெடுங்கோட்டு இடை மதயானைகள், முழை வளர் ஆளி, முழக்கு அறா முதுகுன்றரே! | [6] |
சென்று இல் இடைச் செடி நாய் குரைக்க, செடிச்சிகள் மன்றில் இடைப் பலி தேரப் போவது வாழ்க்கையே? குன்றில் இடைக் களிறு ஆளி கொள்ள, குறத்திகள் முன்றில் இடைப் பிடி கன்று இடும் முதுகுன்றரே! | [7] |
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்தொறும் சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே? மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே! | [8] |
செட்டு நின் காதலி ஊர்கள் தோறும் அறம் செய, அட்டுமின், சில்பலிக்கு! என்று அகம் கடை நிற்பதே? பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர்! பரிசு என்கொலோ? முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே! | [9] |
எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என் சொலார்? பத்தியினால் இடுவார் இடைப் பலி கொண்மினோ! எத்திசையும் திரை ஏற மோதிக் கரைகள் மேல் முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரே! | [10] |
முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரைப் பித்தன் ஒப்பான் அடித்தொண்டன்-ஊரன்-பிதற்று இவை தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்று இலார், எத்தவத்தோர்களும், ஏத்துவார்க்கு இடர் இல்லையே. | [11] |